தூய்மையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தும் பேருந்துகள், ரயில்கள்
சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருக்கும்படி பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோருக்கு நினைவூட்டப்படவிருக்கிறது. இவ்வாண்டுக்கான பொதுச் சுகாதார மன்றத்தில் இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்த நினைவூட்டல் வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருக்கும்படி வலியுறுத்தும் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ரயில் ஒன்று வடக்கு கிழக்குப் பாதையில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும்.
தூய்மையைக் கடைப்பிடிக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்றும்படி நினைவூட்டும் ஒட்டுப்படங்கள் ரயில் பெட்டிகள் அனைத்திலும் ஒட்டப்படும்.
பொதுப் போக்குவரத்தில் அதிகமானோர் பயணம் செய்வதால் புதிய இயக்கத்தை அதில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டதாகப் பொதுச் சுகாதார மன்றத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா லியூ ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) கூறினார்.
இவ்வாண்டின் பிற்பாதியில் சிங்கப்பூரின் வெவ்வேறு பாதைகளில் செல்லும் 10 பொதுப் பேருந்துகளிலும் தூய்மையைக் கடைப்பிடிக்கும்படியான செய்திகள் ஒட்டப்படும்.
“பெரியோரோ சிறியோரோ. யாராக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பொதுப் போக்குவரத்தில் செல்வோருக்கு இயக்கத்தின் செய்தி சென்று சேரும்,” என்று லியூ சொன்னார்.
பொங்கோல் கோஸ்ட் டிஜிட்டல் வில்லேஜ் வளாகத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆசியான் யுனைட் நிகழ்ச்சியில் லியூ பேசினார்.
சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு சமூகத்தினரை ஒன்றிணைப்பதுடன் தூய்மையான, நீடித்த நிலைத்தன்மையுள்ள பழக்கங்களைச் சுற்றுச்சூழல் பராமரிப்பை முன்னெடுக்கிறது பொதுச் சுகாதார மன்றத்தின் ஆசியான் யுனைட் நிகழ்ச்சி.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்ளாதேஷ், புருணை, டாருசலம், கம்போடியா, இந்தியா, இந்தோனீசியா, மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்தே ஆகிய நாடுகளிலிருந்து 400க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டுக்கான சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருக்கும்படி வலியுறுத்தும் இயக்கம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.