‘தவெக அமைச்சர்களின் அறியாமை.. ஆணவம்.. கேலிக்கூத்தாகும் சட்டப்பேரவை’ : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
முரசொலி தலையங்கம் (02.09.2026)
அறியாமையா? ஆணவமா?
ஆளும் கட்சி அமைச்சர்கள் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கு வதைத்தான் பேரவைத் தலைவர் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். இதுவரை வரலாறு காணாத மாற்றம் இது!
‘சட்டப்பேரவையில் ஆதாரமின்றி பேசக்கூடாது' என அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோரை மீண்டும் மீண்டும் பேரவைத் தலைவர் கண்டித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவர்கள் அடங்கு வதாகத் தெரியவில்லை. தாங்கள் பேசுவதை 'ரீல்ஸ்' போட்டு பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதற்காக அவர்கள் பேசும் பேச்சுகள் அருவருப்பாக உள்ளன. அவர்களது பேச்சில் ஆணவமும் வெளிப்படுகிறது. அவர்களது அறியாமையும் வெளிப்படுகிறது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துறை ரீதியான கேள்வி களை எழுப்புகின்றனர். அதற்கு, துறைரீதியான பதிலைச் சொல்ல வேண்டும். மாறாக அதனை அரசியல் ரீதியாக மாற்றி, மாட்டிக் கொள்கிறார்கள் அமைச்சர்கள்.
‘டாஸ்மாக்’ வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் அது குறித்து பேசினார். இதற்கு, தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேரவைத் தலைவர் தடுத்தும் தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் பேசினார். இதையடுத்து, பேரவைத் தலைவரே அவர்களைக் கண்டித்தார்.
“நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்தும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முன்வைத்தும் அமைச்சர்கள் பேசக்கூடாது” என பேரவைத் தலைவர் கண்டித்தார். “நேரலை செல்வதால் மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும்” என்று அமைச்சர்கள் ஆதவ்அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு கண்டிப்புடன் தெரிவித்தார் பேரவைத் தலைவர்.
தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல ஆதவ் அர்ஜூனா காட்டிக் கொள்வதற்காக அனைத்துக்கும் எழுந்து, பேசி, 'தனக்கு எதுவும் தெரியாது’ என்பதை தினந்தோறும் அவைக்குக் காட்டி அவமானப்பட்டு வருகிறார்.
‘ஆதவ் அர்ஜூனா பேசினாலே பிரச்சினைதான் வருகிறது. அவரை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்' என்று உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சொன்னார். இதை விட ஒருவருக்கு புத்திமதி சொல்லி இருக்க முடியாது. ஒருநாள் அவைக்கு ஆதவ் அர்ஜூனா வரவில்லை. 'இன்று அவை அமைதியாக இருக்கிறது. இன்றாவது ஒன்றரை மணிக்கு முடித்து விடுங்கள்' என்றும் பிரேமலதா விஜயகாந்த் சொன்னார். இதன் பிறகாவது ஆதவ் அர்ஜூனாவுக்கு சொரணை வந்ததா என்றால் இல்லை. 'திருந்தாத ஜென்மம்’ என்பதையே இவர்கள் காட்டிக் கொள்கிறார்கள்.
த.வெ.க. அமைச்சர்களுக்கு அவை மாண்புகள், நடவடிக்கைகள் தெரியவில்லை. புதிதாக அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவார்கள். பார்த்துப் பார்த்து, பயந்து பயந்து பேசுவார்கள். ஆனால் த.வெ.க. அமைச்சர்களோ தெருவில் பேசுவதைப் போல பேசுகிறார்கள்.