Toxic Day 5 Box Office
சென்னை: யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கும் டாக்சிக் திரைப்படம் மோசமான தோல்வியை பெற்றிருக்கிறது. இதில் பல நட்சத்திரங்கள் நடித்தும் படம் படுத்துவிட்டது. காரணம் படத்தில் கதையை விட மற்ற விஷயங்கள் மட்டுமே இருந்தன. இந்நிலையில் அதன் ஐந்தாவது நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கேஜிஎஃப் படங்கள் மாதிரி தனக்கு பெரிய வெற்றியை பான் இந்தியா அளவில் கொடுக்கும் என்றுதான் டாக்சிக் படத்தில் நடித்தார் யஷ். படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட மூன்று வருடங்களில், 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடந்தது. யஷ்ஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் என பலர் நடித்திருந்தார்கள். ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம்தான் பணத்தை தண்ணீராக கொட்டி இப்படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான தோல்வி: படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த ஹைப்போடு சில நாட்களுக்கு முன்பு படம் தியேட்டர்களில் ரிலீஸானது. தங்களுக்கு இன்னொரு கேஜிஎஃப் உலகத்தை ராக்கி பாய் யஷ் காண்பிக்கப்போகிறார் என்ற ஆவலோடு தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் அவர்களுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியைத்தான் யஷ்ஷும், கீது மோகன்தாஸும் சேர்ந்து கொடுத்துவிட்டார்கள் என சொல்ல வேண்டும்.
ஏன் தோல்வி?: 600 கோடி ரூபாயை கொட்டி, மூன்று வருடங்களாக உழைத்து படம் எடுத்ததாக சொல்கிறார்கள்; ஆனால் அதில் ஒன்றுமே இல்லையே என நொந்துகொண்டார்கள் ரசிகர்கள். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கலாம், நெருக்கமான காட்சிகள் இருக்கலாம். டாக்சிக்கில் அது மட்டும்தான் இருக்கிறது. கதையோ, திரைக்கதையோ இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. எங்கே கதை நடக்கிறது, என்ன கதை என்று ஒன்றுமே புரியாமல் குழப்பத்திலேயே மூன்று மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியேறினார்கள் ரசிகர்கள்.
கழுவி ஊற்றிவிட்டார்கள்: இப்படி தங்களை படக்குழு ஏமாற்றிவிட்டதே என்ற கோபத்திலும், ஆற்றாமையிலும் படத்தை வைத்து செய்துவிட்டார்கள் ரசிகர்கள். முக்கியமாக யஷ், கீது மீது அவர்களது டார்கெட் திரும்பிவிட்டது. கேஜிஎஃப் ஹிட் கொடுத்தால் அதே ஜானரில்தான் நடிக்க வேண்டுமா? அதிலிருந்து அவர் எப்போது வெளியே வருவாரோ என கேள்விகளை முன்வைத்த அவர்கள்; கீது ஒரு பெண் இயக்குநராக இருந்துகொண்டு பெண்களை இப்படியா படத்தில் காட்டுவது என விளாசி தள்ளிவிட்டார்கள்.
வசூல் நிலவரம்: இப்படி எட்டுத்திக்கிலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன. இதை பார்த்து காண்டான யஷ் தரப்பும், கேவிஎன் தரப்பும் சிலருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆகமொத்தம் டாக்சிக் படம் படுதோல்வி லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
ஓவர் ஹைப்பில் முதல் நாள் 101 கோடி ரூபாயை வசூலித்ததுதான். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் செல்ஃப் எடுக்கவில்லை. ஐந்தாவது நாளான நேற்று விடுமுறையாக இருந்தாலும்கூட வசூல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வெறும் 23 கோடி ரூபாயைத்தான் வசூலித்ததாம்.மொத்தம் இதுவரை அந்தப் படம் 213 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம்.