📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 02:00 AM

மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா?

மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா?

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அமைச்சர் மரியவில்சனிடம் அவரது தமிழ் உச்சரிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஒரு அறிவுரையாக கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரியவில்சன் தான் ஒரு கிறிஸ்தவர் என்றும், தனக்கு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரியும் என்றும் ஆவேசமாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,

“இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம்.

ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது.

“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்?

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்?

அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.