சாங்கி விமான நிலைய ஆடைத் திருட்டு: பிரிட்டிஷ் ஆடவர் மீது குற்றச்சாட்டு
சாங்கி விமான நிலையத்தின் கடை ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆடை பொம்மையிலிருந்து, S$350 மதிப்புள்ள நீல நிற ‘டெனிம்’ மேலாடையைத் திருடியதாக 26 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஒருவர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) குற்றம்சாட்டப்பட்டது.
திருட்டுச் சம்பவம் 2024 ஆகஸ்ட் 14ஆம் தேதி நிகழ்ந்தது. கடையில் வைக்கப்பட்டிருந்த பொம்மை அணிந்திருந்த மேலாடை காணாமல் போனதை விற்பனை உதவியாளர் உணர்ந்ததை அடுத்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளைச் சோதித்தபோது, அந்த ஆடவர் மேலாடையை எடுத்துக்கொண்டு கட்டணம் செலுத்தாமல் வெளியேறியது தெரியவந்தது.
அதிகாரிகளால் அவரது அடையாளத்தை உறுதிசெய்வதற்குள் அவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேறிவிட்டார்.
ஈராண்டுகள் கழித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி சாங்கி விமான நிலையப் பயண இடைமாற்றப் பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
கடைத் திருட்டுக் குற்றங்களைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் குற்றம் புரிந்துவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிடலாம் என நினைக்கக்கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.