கட்டணத் தாமதங்களை அதிகம் எதிர்கொள்ளும் சிங்கப்பூர் நிறுவனங்கள்
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதி வர்த்தகங்கள், நேரத்துக்குக் கட்டணத்தைப் பெறாமல் தவிப்பதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற ஏறக்குறைய 49 விழுக்காட்டு சிங்கப்பூர் நிறுவனங்கள், கடந்த ஆண்டில் தாமதமாகச் செலுத்தப்படும் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டன.
வாடிக்கையாளர்களிடம் நேரத்திற்குக் கட்டணத்தைப் பெறுவதாக ஏறத்தாழ 21 விழுக்காட்டினர் கூறியதாக கோஃபேஸ் அபேக் கட்டண ஆய்வு 2026 தெரிவித்தது.
10 ஆசிய பசிபிக் சந்தைகளைச் சேர்ந்த 2,800 பேர் ஆய்வில் பங்கேற்றனர். அவர்களில் 152 பேர் சிங்கப்பூரின் நிதிசார் வல்லுநர்கள்.
தாமதமாகக் கிடைக்கும் கட்டணங்களால் விநியோகிப்பாளர்கள் பலருக்கு நேரடி நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற கிட்டத்தட்ட 57 விழுக்காட்டு சிங்கப்பூர் நிறுவனங்கள், கடந்த 12 மாதங்களில் குறைந்தது ஒரு முறையாவது வாடிக்கையாளர்களின் கட்டணங்கள் தாமதமாகப் பெறப்பட்டதைக் குறிப்பிட்டன.
மின்னணுவியல், துல்லியப் பொறியியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளர்ச்சியின் காரணமாக இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 5.7 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
இருப்பினும், இந்த இரட்டை வேக பொருளியல் வளர்ச்சி மற்ற துறைகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது என்றும் மூலப்பொருள்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை, புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றால் ரசாயன ஒப்பந்தம் போன்ற துறைகள் சரிவை எதிர்கொண்டுள்ளன என்றும் ஆசிய பசிபிக்கான கோஃபேஸ் தலைமைப் பொருளியல் வல்லுநர் பர்னார்ட் அவ் கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அந்தத் துறைகளில் கட்டணப் பரிவர்த்தனை அனுபவங்கள் பெருமளவில் மாறுபட்டுள்ளன என்றார் அவர்.
கட்டுமானத் துறை மிக மோசமான பணப்புழக்க நெருக்கடிகளை எதிர்கொண்டது; அது தேசிய சராசரியான 66.3 நாள்களைவிட அதிகமாக, சராசரியாக 85.8 நாள்கள்வரை மிக நீண்ட கட்டணத் தாமதத்தைப் பதிவு செய்துள்ளது.