குடும்பம் எனும் அடித்தளத்திற்கு உரம், சிங்கப்பூர் செய்திகள்
குடும்பங்களே நாட்டின் அடிப்படை என பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.
பிள்ளைகள் பிறக்கும்போது வழங்கும் உதவிகளுடன் நின்றுவிடாமல் அவர்களை வளர்க்கும் ஒட்டுமொத்தப் பயணத்திலும் பெற்றோருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தமது மூன்றாவது தேசிய தினப் பேரணி உரையை ஆற்றியபோது பிரதமர் வோங் தெரிவித்தார்.
குடும்பங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் வகையில், 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக்கொண்ட வேலை பார்க்கும் பெற்றோருக்கு 8 முதல் 12 நாள்களாக குழந்தைப் பராமரிப்பு விடுப்பு அதிகரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சிங்கப்பூர் குழந்தைக்கும் கிட்டத்தட்ட $70,000 நேரடி நிதி உதவி கிடைப்பதுடன், 2030க்குள் முழுநேரக் குழந்தைப் பராமரிப்புக் கட்டணம் மாதம் $150 ஆகக் குறைக்கப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளுக்கான வருமான வரம்பு $16,000 ஆகவும், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கு $18,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது. முதல்முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதல் குலுக்கல் வாய்ப்பு வழங்கப்படும்.
சிங்கப்பூரர்கள் குடும்பங்களைத் தொடங்குவதற்கும் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் அரசாங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் மூத்த குடிமக்கள் தனிநபர்களுக்கான ஆதரவுத் திட்டங்களும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
குடும்பங்களுக்கான ஆதரவு குறித்து அமைச்சர் இந்திராணி ராஜாவின் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டு ஆதரவு வழங்குவதை அடிப்படையில் மாற்றியமைப்பது குறித்து ஆராயப்பட்டதாக அவர் கூறினார்.
குடும்பங்களின் சுமையைக் குறைத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் முயற்சி இது. அதன் பயன்களை அறுவடை செய்ய சில காலம் ஆகும் என்றார் திரு வோங்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைமையகத்தில் ஏறத்தாழ 1,300 பேர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் வோங், உலகளாவிய மாற்றங்களையும் சுட்டிக்காட்டினார்.
வல்லரசுப் போட்டி, மாறிவரும் பொருளியல் சூழல் ஆகியவற்றால் உலகம் முன்பைவிட அதிக நிச்சயமற்ற தன்மையைக் கொண்டுள்ளது. இந்நிலையைச் சமாளிக்கச் சிங்கப்பூர் தயாராக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவர்களைப் பாதுகாக்க 13 வயது என்ற குறைந்தபட்ச வயது வரம்பு அமல்படுத்தப்படும் என்றார் திரு வோங். 13 வயதுக்கு மேற்பட்டோரைத் தொடர்ச்சியான பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கும் தொழில்நுட்ப அம்சங்களும் கட்டாயமாக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் சவால்களைக் களையவும் வேலைவாய்ப்புகளை அவை மாற்றியமைத்தாலும் எவரையும் பின்தங்கவிடாமல் ஒன்றிணைந்து முன்னேற தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரதமர் வோங்.
வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கவனமாகக் கட்டுப்படுத்தப்படும் என்பதால், நாட்டின் வளர்ச்சி இனி தொழில்நுட்பம், உற்பத்தித்திறனைச் சார்ந்தே இருக்கும்.
உலகளாவிய சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமாக இருப்பதை அவர் எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டு பேசினார். போர்ச் சூழல்கள், பதற்றநிலைகள் என பல்வேறு பாதகமாங்கள் சூழ்ந்திருக்கின்றன. அவற்றை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்றாலும் அத்தகைய சூழ்நிலைகளுக்கு நாம் எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கிறோம் என்பதில்தான் சிங்கப்பூர் அதன் நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூரின் தொலைநோக்குப் பார்வையையும், யதார்த்தமான அணுகுமுறையையும் அழகாகப் பிரதிபலிக்கிறது. உலகளாவிய பொருளியல் நெருக்கடிகளையும் தொழில்நுட்பத்தின் வேகத்தையும் பயமுறுத்தும் வகையில் சொல்லாமல், அதை எதிர்கொள்ளும் விதமாக மக்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் வழிகாட்டுதல், வேலை பாதுகாப்பு, குடும்ப உதவித்தொகை வழங்கி தைரிய மூட்டுகிறது.
சவால்களை எந்நிலையில் வந்தாலும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு ஒற்றுமையே வலிமையைத் தரும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.