📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 28, 2026 02:04 AM

ரஜினி உடனான ‘தர்மன்’ அனுபவம் எப்படி?

ரஜினி உடனான ‘தர்மன்’ அனுபவம் எப்படி?

‘தர்மன்’ படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். ஜென்ஸி வைபில் ரஜினி இதில் இருப்பார் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்மன்’. இந்தப் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

இதனிடையே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நிகழ்ச்சி ஒன்றில் ‘தர்மன்’ படம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறுகையில், “தர்மனுக்கு அடுத்து சிலம்பரசனுடன் ஒரு படம் பண்ணுகிறேன். படத்தின் பெயரைச் சொல்ல முடியாது. தர்மன் படப்பிடிப்பு அக்டோபரில் முடிந்துவிடும். எஸ்டிஆர் படம் பிப்ரவரியில் தொடங்கும்.

தர்மன் படத்தை பற்றிய அப்டேட் என்றால், ரஜினியுடன் வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதற்கு முன்பு வேலை செய்த அசோக், பிரதீப் இரண்டு பேரும் இளம் கதாநாயகர்கள், இருவரும் நண்பர்கள். இடையில் சிம்பு, அவரும் நீண்ட நாட்கள் பழகியதில் நண்பராகி விட்டார். ஒரு சகோதரன் போல எனக்கு.

இப்போது இரண்டு மாதங்களாக ரஜினியுடன் பணியாற்றி வருகிறேன். அவரைப் போல ஓர் இனிமையான மனிதரை நான் பார்த்ததே இல்லை. நெல்சன்.. எல்லோரும் அவரைப் பற்றி சொல்வது எல்லாமே உண்மை. அவ்வளவு இனியான மனிதர்.

சில நேரங்களில் நாம் கடந்து போகும்போதும் திடீரென அவர் எழுந்துவிடுவார். கேட்டால் இயக்குநருக்கான மரியாதை என்பார். அது அவர் சினிமா மீது வைத்திருக்கும், அந்தத் தொழிலுக்கு கொடுக்கும் மரியாதை.

‘தர்மன்’ படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். ரஜினி ஜென்ஸீ வைபில், நம்மோட மீட்டரிலேயே இருப்பார். படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும். கமலுடன் வேலை பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தை நான் எனக்கு கிடைத்த வாய்ப்பாக பார்க்கவில்லை. என்னைப் போல இருக்கும் இயக்குநர்களின் கனவை நான் எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்பாகவே பார்க்கிறேன். எனது பணியினை நான் சிறப்பாக செய்திருக்கிறேன். நிச்சயம் படம் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்மன்’. இந்தப் படத்தில் அவர் டாக்டராக நடிக்கிறார். படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. படத்தில் இருந்து அவர் விலகிய நிலையில், சிபி சக்கரவர்த்தி படத்தினை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அவரும் விலகிக் கொண்ட நிலையில், தற்போது அஸ்வத் மாரிமுத்து படத்தை இயக்கி வருகிறார்.

சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.