📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 02, 2026 05:04 PM

தவெக ஆட்சியில்.. கடவுள் சிலைகளுக்கு கூட பாதுகாப்பில்லை

தவெக ஆட்சியில்.. கடவுள் சிலைகளுக்கு கூட பாதுகாப்பில்லை

மரகத சிலை திருட்டு தொடர்பான வழக்கில் விரைவில் திருடியவர்களைக் கைது செய்து சிலையை மீட்டு மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான மரகதத்தால் ஆன முருகக் கடவுள் மூலவர் சிலை திருடு போயுள்ளதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

முத்துச்சுவாமி சித்தரின் கடின உழைப்பாலும், தெய்வீக அருளாலும் அமைக்கப்பெற்ற இக்கோவில் காஞ்சி மஹா பெரியவரால் நடுபழனி என்று பெயர் சூட்டப்பட்ட பெருமை உடையது. இப்படி பல சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நடைபெற்ற இந்தத் திருட்டு சம்பவம் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சியில் பொதுமக்களுக்குத்தான் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகி இருக்கும் சூழலில் தற்போது கடவுள் சிலைகளுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் கூட பாதுகாப்பில்லா நிலை ஏற்பட்டுள்ளது ஆட்சி நிர்வாகத்தின் அவல நிலை. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிலைகளையும், வரலாற்று பொக்கிஷங்களையும் வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமர் நரேந்திரன் மோடி மீட்டெடுத்து தாயகத்திற்கு கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற விலைமதிப்பற்ற விக்ரகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாதது கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

எனவே மரகத சிலை திருட்டு தொடர்பான வழக்கில் விரைவில் திருடியவர்களைக் கைது செய்து சிலையை மீட்டு மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையை வலியுறுத்துகிறேன்.